
அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது, இது தமிழ்நாடு! 2026-ம் திராவிட மாடல் ஆட்சிதான்!! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
“டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது. மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம்.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை சுற்றுவட்டாரங்களில் தொழில்வளாகங்களை உருவாக்கியவர் கருணாநிதி. கண்ணாடி முதல் கார் வரை அனைத்து தொழில்களும் அவரது ஆட்சியில் தொடங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதிமுகவின் இருண்ட ஆட்சிகாலத்தில் முடங்கிக் கிடந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள், கடந்த 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில்தான் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பதே சந்தர்ப்பவாதிகளின் ஒரே நோக்கம். அமித் ஷா நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புவதற்காக ஏதோ பேசி சென்று இருக்கிறார்.
இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தான் தமிழ்நாடு போராடுகிறது. மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக தான். நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, வக்பு சட்டத் திருத்தம், தொகுதி மறுசீரமைப்பு என அனைத்திற்கும் எதிராக நாம்தான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்து வருகிறோம்.
திசை மாறி சென்றவர்கள் திசைக்காட்டியாக உள்ள எங்களை பார்த்துக் குறை சொல்ல வேண்டாம். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதி கொடுத்திருக்கிறோம் என பட்டியலிட முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம், நீட் விலக்கு தருவோம் என்று உறுதி அளிக்க முடியுமா?. ‘மத்திய அரசிடம் கையேந்தி நிற்க மாநில அரசுகள் என்ன பிச்சைக்காரர்களா?’ என்று முதல்வராக இருந்தபோது மோடி கேட்டார். பிரதமரான உடனேயே மாநிலங்கள் நிதி கேட்டால் அழுவதாக மோடி விமர்சிக்கிறார். மாநிலங்கள் அழுவதாக மோடி கூறுவது எந்த வகையில் நியாயம்.
நாங்கள் கேட்பது அழுகை அல்ல; தமிழ்நாட்டுக்கான உரிமை. நான் அழுது புலம்புபவனும் அல்ல, உருண்டு போய் யார் காலிலும் விழுபவனும் அல்ல. மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம். தமிழகத்தில் அனைத்து துறைகளையும் நம்பர் ஒன் ஆக மாற்ற உழைத்துக் கொண்டிருப்போம்.
கட்சிகளை உடைக்கும் ஃபார்முலா தமிழகத்தில் எடுபடாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது. கட்சிகளை உடைத்து ஆட்சி அமைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் வேலைக்காகாது. மற்ற மாநிலங்களில் செய்வது போல் தமிழ்நாட்டில் உங்கள் வேலையை காட்ட முடியாது.
இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்துள்ள நீங்கள் ஜெயிக்க முடியுமா?. எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது. டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. அப்படியொரு தனித்தன்மை கொண்டவர்கள் நாங்கள். எங்க தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்” எனத் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்துக்கான 5 அறிவிப்புகள்: * கூவம் ஆற்றின் குறுக்கே, ரூ.20.37 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்.
- கொற்றலை ஆற்றின் குறுக்கே, ரூ.23.47 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
- காக்களூர் ஊராட்சியில் தாமரைக்குளம் மேம்படுத்தப்படும் பணிகள், ரூ. 2.27 கோடியில் மேற்கொள்ளப்படும்.
- பழவேற்காடு ஏரி பகுதியில் சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், வைரவன் குப்பம் பகுதியில் வலை பின்னும் கூடம் அமைக்கப்படும்.
- திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி, மேம்படுத்தப்படும். போன்ற அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார்.