அரபுநாடுகளுக்கான புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்கு மாற்றாக புதிய கூட்டமைப்பை உருவாக்க ஐக்கிய அமீரகம் முடிவு செய்துள்ளது.  சவுதி அரேபியாவுடன் இணைந்து இந்தப் புதிய கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் திடீரென அறிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (Gulf Cooperation Council – GCC) என்ற கூட்டமைப்பை ஐக்கிய அரபு அமீரகம் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதா!க தெரிகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில், பஹரின், குவைத், ஓமன், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவற்றில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு தருவதாக கூறி, அமீரகம் உள்ளிட்ட 5 அரபு நாடுகள், கத்தாருடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தன. இதுதொடர்பான சிக்கல் நீடித்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்த முடிவை அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் தொடங்க உள்ள இந்தப் புதிய கூட்டமைப்பு, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான அமைப்பாக செயல்படும் எனத் தெரிகிறது.