ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி திமுகவுக்கானது அல்ல: ஸ்டாலின்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”1967 பொதுத்தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தது. பாளைச் சிறையில் இருந்து வெளிவந்த தலைவர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் ‘தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த ‘தர்மம் வென்றது’ எனக் குறிப்பிட்டார். அதேபோல இன்று ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்’ வென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி, திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு 24,651 வாக்காளர்கள், தங்களின் விலை மதிக்க முடியாத வாக்குகளை அளித்திருப்பது நேர்மையான, உயிரோட்டமுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீது, இன்றைய சூழலிலும் அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்குத் துணை நின்று, பண மழையிலிருந்து ஜனநாயகத்தை, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் அதனைச் சந்தித்துப் போராடிப் பாதுகாத்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் திமுக ஆர்.கே. நகர் இடைத் தேர்தலைச் சந்தித்தது. ‘வாக்காளர் பட்டியல்’ சரிபார்ப்பில் தொடங்கி ‘வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம்’ விநியோகிக்கப்படுவது வரை பலமுனைகளிலும் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படியான உதவியையும், முறையான கண்காணிப்பையும் நாடினோம்.

தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டி, ஏனோதானோ என்றிருந்த நேரத்தில், உயர் நீதிமன்றத்திலும் அயராது போராடினோம். தேர்தல் ஆணையம் பாராமுகமாக இருந்ததே தவிர, பண விநியோகத்தைத் தடுக்கவில்லை. சுதந்திரமான தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அதிகார இயந்திரமும் துரும்பைக் கூட எடுத்துப் போட முயற்சிக்கவில்லை. இதற்கு முன் நடைபெற்ற எந்த இடைத் தேர்தலிலும் இப்படியொரு கரும்புள்ளியை தேர்தல் ஆணையம் தனக்குத் தானே ‘திலகம்’ என நினைத்து இட்டுக் கொண்டதில்லை என்று நடுநிலையாளர்கள் கருதுமளவிற்கு தேர்தல் ஆணையம், அதன் பிரதிநிதியான தலைமை தேர்தல் அதிகாரியும் கையறுந்த நிலையில் காரியமாற்ற இயலாமல் பரிதாபமாக நின்றதைக் காண முடிந்தது.

தேர்தல் பார்வையாளர்கள் வந்தார்கள்; சென்றார்கள். அவ்வளவுதான். வாக்குப் பதிவு தினத்தன்றே வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்தது, ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் மட்டுமல்ல- வானளாவிய அதிகாரங்கள் கொண்ட தேர்தல் ஆணையமும்தான்.

ஆகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை, மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.