இறையாண்மை கொண்ட மாநில அரசுகளை மத்திய அரசு மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்: சந்திரபாபு நாயுடு

மாநில அரசுகள் தனி இறையாண்மை கொண்டவை என்றும், மத்திய அரசு அதனை மதிக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மத்திய அரசுக்கு எதிராக நடத்தி வந்த மூன்று நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, சந்திரபாபு நாயுடு கொல்கத்தா சென்றிருந்தார். பின்னர், மம்தா பானர்ஜி அவரது முன்னிலையில் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்ததில் மம்தா பானர்ஜி முக்கியப் பங்காற்றினார். இதனையடுத்து, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற பிரம்மாண்டமான மாநாட்டையும் அவர் நடத்திக் காட்டினார். அந்த மாநாடு இந்த  நாட்டுக்கு ஒரு முக்கியச் செய்தியைக் கூறியது. மோடி ஆட்சியில், சிபிஐ, ஆர்பிஐ, அமலாக்கத்துறை என,  மத்திய அரசின் அத்தனை அமைப்புகளும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துகின்றனர். சாரதா சிட்பண்ட் விவகாரம் மிகப்பழமையானது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அந்த வழக்கை தவறாக பயன்படுத்துகின்றனர். ஆந்திர மாநிலத்திற்கு உறுதியளித்தபடி சிறப்பு அந்தஸ்து கோரியதற்காக தெலுங்கு தேச கட்சி எம்பிக்கள் சிபிஐ மூலமாகவும், எம்எல்ஏக்கள் அமலாக்கத்துறை மூலமாகவும் அச்சுறுத்தப்பட்டனர். காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இது நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

இது கூட்டாட்சி அமைப்பைக் கொண்ட ஜனநாயக நாடு. ஆனால், பிரதமரின் அணுகுமுறை இதற்கு நேரெதிராக, முரட்டுத்தனத்துடன் அமைந்துள்ளது. மாநில அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனி இறையாண்மையைக் கொண்டவையாகும். அவை எதற்கும் துணை அமைப்பல்ல. மத்திய அரசை நாம் மதிக்கிறோம். மத்திய அரசும் நம்மை மதிக்க வேண்டும். அப்படி நடக்கத் தவறினால் நாடு பெரும் இழப்பைச் சந்திக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.