உதிரா பூக்கள் – 3 : சுந்தரபுத்தன்

நட்பின் சுவை

FB_IMG_1469450759919

தஞ்சை இரா. செழியன். கல்லூரி காலத்தில் முகிழ்த்த நட்பு. உற்சாகமும் அன்பும் நிறைந்த நண்பர். நேற்று கூரியர் சேவை, இன்று உணவகம் என வளர்ச்சியின் பாதையில் இருக்கிறார். எப்போதும் புதிய தொழில் முயற்சிகளை செய்துகொண்டே இருப்பவர். தமிழ்ப் பல்கலைக்கழக திறப்பு விழாவின்போது, பள்ளிச் சிறுவனாக எம்ஜிஆரின் கரங்களால் பேச்சுப்போட்டிக்கான முதல் பரிசு பெற்றவர்.

சொந்த வேலைகளுக்கு இடையில் தஞ்சாவூரில் சமூக இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருவதைப் பார்த்திருக்கிறேன். கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல் தொகுப்புகளின் வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்திக்காட்டி பாராட்டுகளைக் குவித்தவர். பெருங்கூட்டத்தால் திலகர் திடல் நிரம்பிவழிந்தது. ஏ.ஆர். ரகுமான், எஸ்பிபி, ஜானகி, பாரதிராஜா, டாக்டர் காளிமுத்து என பிரபலங்கள் ஒரே மேடையில் குவிந்த விழா அது.

தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர் தொடங்கிய தஞ்சை மணி பத்திரிகையில் பகுதிநேர பணியில் இருந்திருக்கிறேன். சென்னைக்கு நகர்ந்த பிறகு அவ்வப்போது பேசுவேன். அண்மையில் தஞ்சாவூர் சென்றிருந்தபோது செழியனைச் சந்தித்தேன்.

அருளானந்த நகரில் அவர் தொடங்கியுள்ள டிலைட் என்ற புதிய ரெஸ்ட்டாரண்ட்டில் அன்றிரவு சாப்பிட்டேன். மிக சுவையான நான்வெஜ் உணவு. டிலைட்டில் பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். உணவகத்தின் உள்ளே கலைநயமிக்க இன்ட்டீரியர். புதிய அனுபவம். அடுத்த நாள் செழியன் 50 வயதை எட்டுவதாகச் சொன்னார். பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறிவிட்டு விடைபெற்றேன்.

—————————————————————————