என்னை மிரட்டி பொய் வாக்குமூலம் வாங்கினார்கள்: செய்தியாளர்களிடம் நிர்மலாதேவி பேட்டி

“என்னை மிரட்டிதான் வாக்குமூலம் வாங்கினார்கள் என சிறைவளாகத்தில் போலீசாரின் கெடுபிடிகளுக்கு இடையே செய்தியாளர்களிடம் வாய்திறந்த நிர்மலாதேவி கூறியுள்ளார்.

 

மதுரையில், மருத்துவ கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்து செல்ல முற்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோ வெளியானது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இது சம்பந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில் அருப்புக்கோட்டை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக நிர்மலாதேவி அழைத்து வரப்படும் போதெல்லாம், எந்தவித கருத்தையும் கூறாமல் இருந்தார்.

 

இந்நிலையில் இன்று மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம்  நிர்மலாதேவி பேசினார்.

 

கைது செய்யப்பட்டு 220 நாட்கள் ஆன பிறகு முதல்முறையாக நிர்மலாதேவி தன் தரப்பு கருத்தினை வெளிப்படுத்தினார். “ஒப்புதல் வாக்குமூலம் தவறானது. மிரட்டல்களுக்கு இடையே வாங்கப்பட்டது. ஜாமீன் வழங்குவதற்கும் இடையூறு இருக்கிறது” என்றார்.

 

முன்னதாக காவல்துறையினர் அவரை செய்தியாளர்களிடம் பேச விடாமல் இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.

 

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர், இந்த வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய கூட்டுச்சதி நடைபெற்று வருவதாக கூறினார்.