கர்நாடக அணைகளில் இருந்து மத்திய அரசே தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ்

அரசியலமைப்பு சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரியில் தமிழகம் அதன் பங்கு தண்ணீரைப் பெற கர்நாடகம் எத்தகைய முட்டுக்கட்டைகளைப் போடும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ, அவற்றை கர்நாடக முதல்வர் குமாரசாமி அரங்கேற்றத் தொடங்கி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி கூறியிருப்பது அதைத் தான் காட்டுகிறது.

காவிரி பிரச்சினைக்கான தீர்வை காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு வழங்கியது. அத்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களில் அமைத்திருக்க வேண்டும். ஆனால், கிட்டத்தட்ட 11 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இம்மாதம் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இது நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியத்தை விட அதிகாரம் குறைந்த அமைப்பு தான் என்றாலும் கூட, காவிரி சிக்கலுக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வு ஏற்பட்டால் நல்லது என்ற எண்ணத்தில் அந்த ஏற்பாட்டை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒருவகையில் தியாகம் ஆகும். தங்களின் உரிமைகளை ஓரளவு இழந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களே இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளும் போது, இதனால் பயனடையக் கூடிய மாநிலமான கர்நாடகம் இதை ஏற்று செயல்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், வழக்கம் போலவே கர்நாடக வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. கர்நாடக அணைகளின் நீர்மட்டத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை அளவீடு செய்வதற்கான அதிகாரமும், கர்நாடக விவசாயிகள் எத்தகைய பயிர்களை பயிரிட வேண்டும் என்று அறிவுறுத்தும் அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வமற்ற நடவடிக்கை; இது எங்களுடைய விவசாயிகளுக்கு இழைக்கப்படும் தீங்கு ஆகும் என்று குமாரசாமி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி, நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரையும் அவர் சந்தித்திருக்கிறார். மற்றொருபுறம் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் சிவக்குமார், காவிரி ஆணையத்திற்கு கர்நாடக உறுப்பினரை உடனடியாக நியமிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி, நீர்வளத்