கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தை ஸ்லீப்பர் செல்: தினகரனை வம்புக்கிழுத்த முதல்வர்

கிரிமினல்கள் கண்டுபிடித்த வார்த்தைதான் ஸ்லீப்பர் செல்கள் என்று இன்று உதகையில் நடந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடினார்.

உதகையில் இன்று முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், ”எங்களிடம் இருப்பவர்கள் பத்தரை மாதத்து தங்கங்கள். தினகரனிடம் இருப்பவர்கள் வேண்டுமானால், ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம். நாங்களும், எங்களிடம் இருப்பவர்களும் உழைப்பால் உயர்ந்தவர்கள். நான் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இன்று இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து ஜெயலலிதாவிற்கும், அதிமுகவிற்கும் உண்மையாக உழைத்து வருகிறோம். நாங்கள் துரோகிகள் அல்ல, உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதால்தான், பெரும் தலைவர்கள் ஆசிர்வாதத்துடன் இந்தப் பொறுப்பில் இன்று இருக்கிறோம்.

புதிது பதிதாக பெயர் வைக்கின்றனர். கிரிமினல்களுக்குத்தான் இதுமாதிரியெல்லாம் தோன்றும். உங்களுடன் இருப்பவர்கள் வேண்டுமானால் ஸ்லீப்பர் செல்களாக இருக்கலாம், எங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் பத்தரை மாத்து தங்கங்கள். அமைச்சர் வீரமணி சொல்வதைப் போன்று கிரிமினல்களுக்குத்தான் அந்த எண்ணமெல்லாம் வரும். அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்’ என்றார்.