குமரி ஆனந்தனுக்கு உடல் நலக் குறைவு : அரசு மருத்துவமனையில் சிகிச்சை..

 


காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான குமரி ஆனந்தன் தனி ஆளாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
உடல்நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வரும் குமரி ஆனந்தன் கூறுகையில், “சமத்துவப் பொதுக்கோயில் ஒன்றை தமிழக அரசு கட்ட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோரிக்கையைத் தமிழக அரசிடம் முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்தேன். தருமபுரியில் நான் உண்ணாவிரதம் இருந்து வந்த போது மாவட்ட அளவிலான அதிகாரிகள் என்னிடம் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டனர். நான் மறுத்த போது கைது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கையும் வந்தது. ஆனால் என்னுடைய போராட்டத்தில் நான் உறுதியாக இருந்தேன்.
ஆனால், ஒரு நாள் திடீரென என்னை ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து நான் ராயப்பேட்டையில் வசித்து வரும் என்னுடைய வாடகை வீட்டில் வந்து என்னை விட்டுச்சென்றனர். தொடர் அலைச்சல், உண்ணாவிரதம் என என் கோரிக்கைகாக நான் போராடி வரும்போது திருநாவுக்கரசர், ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றோர் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதன் காரணமாகவே நான் கையிலெடுத்த போரை கைவிட்டேன். தற்போது உண்ணாவிரதம், அலைச்சல் காரணமாக உடல் நலமில்லை. அதனால் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன்”என்றார்.