சரியாக பேசுவதையும் தவறாக சித்தரிக்கும் செவிட்டு ஊடகங்கள்!

வலைகளில் வலம் வரும் வம்புகளில் இருந்து…

———————————————————————-

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் “நாட்டுப்பண்” என்று பேசியிருப்பதை “நாட்டுப்புறப்பாடல்”எனக் கூறியதாக முற்றிலும் தவறான தகவலை செய்தியாக ஒளிபரப்பி இருக்கிறது ஓர் தனியார் செய்தித் தொலைக்காட்சி. ஒரு செய்தி சரியானதா என்பதை பல முறை உறுதி செய்த பின்னரே அதனை வெளியிட வேண்டும் என்ற செய்தித்துறைக்கான அறத்தை அச்சு ஊடகங்கள் இன்றுவரை கடுமையாக கடைப்பிடிக்கின்றன. மிகச் சில தருணங்களில் அதில் தவறுகள் நேர்வதுண்டு. ஆனால், தொலைக்காட்சி ஊடகங்களில் அத்தகைய அறம் மருந்துக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதா மரணச் செய்தியில் அனைத்து ஊடகங்களும் இதில் அம்பலப்பட்டு நின்றன. தற்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஜெயேந்திரர் எழுந்து நிற்காத சர்ச்சை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின் நாட்டுப்பண் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார். ஆனால், அவர் நாட்டுப்புறப்பாடல் எனக் குறிப்பிட்டதாக இந்தச் செய்தியில் ஒளிபரப்பப் படுகிறது. இது என்ன ஊடக தர்மமோ? இது ஜெயேந்திரர் செய்ததை விடவும் இழிவான செயலாக அல்லவா இருக்கிறது…? திமுகவையும், ஸ்டாலினையும் கிண்டலடிப்பதற்கும், இழிவுபடுத்துவதற்கும் தான் ஏற்கனவே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறதே .. .அவர்களுடன் ஊடகங்களும் சேர வேண்டுமா என்ன? தவிர, இது போன்ற நடவடிக்கைகளால், ஏற்கனவே கேள்விக்குறியாகி வரும் ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை, முற்றிலும் தரை மட்டமாகிவிடும் என்பதையும் உரியவர்கள் கவனத்தில் கொள்வது நல்லது. செய்தி ஊடகங்களுக்கு கிளாமர் மட்டும் போதாது… சிறிதளவேனும் அறிவு  நேர்மையும் வேண்டும்….

– வலைத்தளப் பகிர்வில் இருந்து