சீமானை கைது செய்ய வேண்டும் என வீடியோ பதிவிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி..

Vijayalakshmi in Saree Photo Shoot Stills Gallery

இயக்குனரும் நாம் தமிழ்ர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமானை கைது செய்ய வேண்டும்என வீடியோ பதிவு செய்துவிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயற்சித்த அவர், தற்போது, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக அவர், ஒரு வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில், “இது எனது கடைசி வீடியோ. கடந்த 4 மாதமாக சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன்.

ரொம்ப மல்லுக்கட்டிட்டு வாழணும்னு முயற்சித்தது எனது அம்மா, அக்காவுக்காகத்தான். நேற்று முன்தினம் ஹரிநாடார் பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் என்னை அசிங்கப் படுத்தியது போதும் என ஆகி விட்டது. இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். சீமானை விடாதீர்கள். அவர், முன்ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விடக்கூடாது. நான் அதிக நாள் வாழ நினைத்தேன். ஆனால், வாழ விடவில்லை.

சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும்” என கண்ணீர் வடித்தபடி அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.