சேலம்-சென்னை இடையே நாளை விமான சேவை


சேலம்-சென்னை இடையிலான விமான சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை துவக்கி வைக்கிறார்.

சேலம் – சென்னை இடையே இதுவரை விமான சேவை இல்லை. இந்த நிலையில் இந்த இருநகரங்களுக்கும் இடையே உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை துவக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து இருநகரங்களுக்கும் இடையே ட்ரூஜெட் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (25/03/2018) முதல் விமான சேவையை துவக்க உள்ளது. மத்திய அரசின் ‘உதான்‘ திட்டத்தின் கீழ் இந்த விமானப் போக்குவரத்து துவங்கப்படுகிறது. சிறு நகரங்களுக்கு இடையே விமான சேவை துவங்க வேண்டும் என்பதுதான் உதான் திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்தில் உள்ள காமலபுரத்திற்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காமலாபுரத்தில் விமானப் பயணிகள் தங்குவதற்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாளை விமான சேவை துவங்குகிறது.