ஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலகல்..


ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார்.
இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் தாமே எடுத்த முடிவு இது என முகாபே அக் கடிதத்தில் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
முகாபேவுக்கு எதிராக குற்றச்சாட்டு தீர்மானம் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்கிய நிலையில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வந்துள்ளது. இதனால், முகாபேவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட பதவிநீக்க நடவடிக்கை இதனால் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியபிறகு, பதவியில் இருந்து விலக முகாபே மறுத்தார்.
ஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபே அதிபராக இருந்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு துணை அதிபர் எமர்சன் முனங்காக்வாவை முகாபே பதவி நீக்கியதில் இருந்தே அவருக்கு எதிராகப் பிரச்சினை தலையெடுத்தது.
முகாபேயின் விலகலைக் கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சிக் கூச்சல் எழுப்பினர். மக்கள் தெருக்களில் கூடிக் கொண்டாடினர்.
அடுத்த அதிபர் கிரேசின் ஆதரவாளரா?
முகாபேயின் கடிதத்தில் அடுத்து யார் அதிபர் பதவி ஏற்பார்கள் என்ற குறிப்பு இல்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி தற்போதைய துணை அதிபர் பெலெகசெலா முபோகோ-வே அடுத்த அதிபராக முடியும். அவர் முகாபேயின் மனைவி கிரேசின் ஆதரவாளர்.
புதிய தலைவர் பதவியேற்பது புதன்கிழமை நடப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் முடேண்டா கூறியுள்ளார்.
பிரிட்டன் செய்தி
முகாபே-வின் ஆட்சியில் நிலவிய ஒடுக்கு முறையில்லாத புதிய பாதை ஒன்றை ஜிம்பாப்வே அமைத்துக் கொள்வதற்கு இந்தப் பதவி விலகல் வழி வகுத்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வேயின் பழைய நட்பு நாடு என்ற முறையில் அங்கு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடத்தவும், ஜிம்பாப்வேயின் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்யவும் தன்னால் இயன்ற எல்லாவற்றையும் பிரிட்டன் செய்யும் என்று மே கூறியுள்ளார்.