திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா? : மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

திருவாரூரில் தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதைத் தள்ளிவைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இத்துடன், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தி டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மனு அளித்தார். இதனையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாஹூவிடம், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, திருவாரூர் தொகுதி தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் முருகதாஸ், இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, அவர்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.