`தி.மு.கவை விட்டு விலகினால் காங்கிரஸுடன் கூட்டணிக்குத் தயார்!’ : டி.டி.வி.தினகரன் பேட்டி..


காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறினால், அவர்களுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட டி.டி.வி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறார்.

அ.தி.மு.கவுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடவும் டி.டி.வி தினகரன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் தொடர்பாகவும், கட்சி விவகாரங்கள் குறித்தும், பெங்களூர் சிறையிலிருக்கும் சசிகலாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக அவர், பெங்களூர் சென்றார்.

அங்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் சசிகலாவுடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், `தி.மு.க கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் விலகி எங்களை அணுகினால், அவர்களிடம் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.

அதேபோல பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு, `பா.ஜ.கவுடன் ஒருபோதும் கூட்டணியில்லை’ என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.