தோட்டாக்களால் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது: ராகுல்


ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்கள் மக்களை மாநில அரசே கொன்று குவிக்கும் செயல் பயங்கரவாதத்துக்கு உதாரணமாகும். நீதி கேட்டு, அநீதிக்கு எதிராகப் போராடிய மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று ராகுல்காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக மீண்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தமிழர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுப்பதால் தான் படுகொலை செய்யப்படுகின்றனர் என்றும்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக சகோதர சகோதரிகளுடன் எப்போதும் காங்கிரஸ் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.