நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா?: மக்களவையில் மோடி உரை

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா என மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய மோடி கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துகள். இந்தத் தேர்தலில் ஆரோக்கியமான போட்டியை வரவேற்கிறேன். காங்கிரஸ் நண்பர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் சாதிக்கப்படாதவை, 55 மாதகால பாஜக ஆட்சியில் சாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நான்கரை ஆண்டுகளில் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சியில் 11வது 12 வது இடத்தில் இருந்த இந்தியா 6 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதைத் தான் நான் செய்த குற்றமாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றனவா… 11 ஆவது இடத்தை அடைந்த போது பெருமைப்பட்ட காங்கிரஸ் கட்சியினர், 6 ஆவது இடத்திற்கு முன்னேறியது கண்டு ஏன் சோகத்தில் மூழ்க வேண்டும். 1959ல் கேரள கம்யூனிஸ்ட் அரசை காங்கிரஸ் அரசு கலைத்தது. இப்போது அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஜனநாயக அமைப்புகள் மீதான புனிதமும், மரியாதையும் காக்கப்படுகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.