நிர்பயா குற்றவாளிகளின் மரண தண்டனை மேல் முறையீட்டு மனு : உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு..


மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

டெல்லியில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அப்போது அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

இளம் குற்றவாளியான சிறுவன், சீர்திருத்தக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டான். மற்ற ஐந்து பேருக்கும் டெல்லி பெருநகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், முக்கியக் குற்றவாளியான ராம்சிங், 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், பவன் குப்தா, முகேஷ் மற்றும் வினய் சர்மா ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதில், அக்சய்குமார் சிங் என்ற நான்காவது குற்றவாளி மட்டும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, மூவரின் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கலான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவன் குப்தா, முகேஷ் மற்றும் வினய் சர்மா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, அவர்களுக்காக மரண தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பளித்தது.