புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: தமிழகத்தில் இன்றும் மழை தொடர வாய்ப்பு..


தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியிருக்கிறது. இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதம் 27-ம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அன்றிலிருந்தே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது.
குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தலைநகர் சென்னையில், கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
`தற்போது, இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இன்று மழை பெய்யக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.