புதிய மருத்துவனைக் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு மருத்துவமனைக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறுவை அரங்குடன் கூடிய 54 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 65 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறுவை அரங்குடன் கூடிய 57 படுக்கைகள் கொண்ட மருத்துவக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். 454 கிராம சுகாதாரச் செவிலியர்கள் தேர்வான நிலையில், அடையாளமாக 7பேருக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

காரிமங்கலம், புவனகிரி, நெமிலி, பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் 10 கோடியே 47 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி, கோவை மாவட்டத்தில் ஆனைமலை ஆகிய புதிய வருவாய் வட்டங்களைத் தொடக்கி வைத்தார்.