பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாளாகவும், உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் விளங்குகிறது.

பொங்கல் திருநாளை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பினால், 1 கோடியே 84 இலட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவர். இதன்மூலம், தமிழ்நாடு அரசுக்கு சுமார் ரூ.210 கோடி செலவு ஏற்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்று பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.