மதுரையில் எழுத்தாளரை களமிறக்கும் மார்க்சிஸ்ட் கட்சி: வாழ்த்தி வரவேற்கும் வாசகர்கள், நண்பர்கள்

மதுரை மக்களவைத் தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் இன்று 3 மணியளவில் தியாகராய நகரில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

கோவையில் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜனும், மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர்  சு.வெங்கடேசனும் போட்டியிட உள்ளனர் என்று தெரிவித்தார்.

பரபரப்பான தேர்தல் களத்தில் படைப்பாளி ஒருவரை களமிறக்கி உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. வாசகர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்தில் பணியாற்றுவோர் என பலரும் எழுத்தாளர் சு.வெங்கடேசனை வேட்பாளராக அறிவித்திருப்பது அரசியலில் ஆரோக்கியமான சூழல் ஏற்படுவதற்கான அறிகுறி எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.