மதுரை எய்ம்ஸ் வெற்று அறிவிப்பா? அதிர்ச்சியூட்டும் ஆர்.டி.ஐ தகவல்..


ஆர்.டி.ஐ தகவல் மூலம் மதுரை எய்ம்ஸ் அறிவிப்பு குறித்து அதிர்ச்சிகர செய்தி கிடைத்துள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ‘இந்தியா டுடே’ பத்திரிகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் குறித்து ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்திடம் கேள்விகள் கேட்கப்பட்டு, பெறப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மாநிலத்திற்கு ஒரு எய்ம்ஸ் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2014-15, 2015-16, 2017-18 ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் 48 மாதங்கள் ஆகியும், எந்த மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, இதுவரை நிதி ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் இல்லை.

எய்ம்ஸ் அறிவிப்புகள்(செயல்பாடு) – மதிப்பீடு – ஒதுக்கீடு:

* உ.பி., கோரக்பூர்(2020) – ரூ.1,011 கோடி – ரூ.98.34 கோடி

* ஆந்திரப் பிரதேசம்(2020) – ரூ.1,618 கோடி – ரூ.233.88 கோடி

* மேற்கு வங்கம், கல்யாணி(2020) – ரூ.1,754 கோடி – ரூ.278.42 கோடி

* மகாராஷ்டிரா, நாக்பூர்(2020) – ரூ.1,577 கோடி – ரூ.231.29 கோடி

* அசாம், கம்பூர்(2021) – ரூ.1,123 கோடி – ரூ.5 கோடி

* பஞ்சாப், பத்திண்டா(2020) – ரூ.925 கோடி – ரூ.36.57 கோடி

* இமாச்சல், பிலாஸ்பூர்(2021) – ரூ.1,350 கோடி – ஒதுக்கீடு இல்லை

* பீகார் – இடம் தேர்வு செய்யப்படவில்லை – ஒதுக்கீடு இல்லை

* தமிழ்நாடு – நிலம் ஒதுக்கீடு – நிதி ஒதுக்கீடு இல்லை – காலக்கெடு இல்லை

தற்போதைய மத்திய அரசின் காலக்கெடு முடிவடைய இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதற்கிடையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்பிற்கு, கோடிக்கணக்கில் நிதி தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். இதனால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.