“11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்” – தென்னிந்திய நடிகர் சங்கம்


11 பேர் உயிரிழந்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்’ என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக் கோரி, 100 நாட்களாக அமைதிப் போராட்டம் நடத்திய மக்கள் மீது இன்று போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது. 11 பேர் உயிரிழந்து, பலரும் காயம்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயலாக இருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வருத்தத்தையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்தில் சினிமாத் துறையின் சார்பில் நடைபெற்ற அறவழிப் போராட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி, சினிமாத் துறையைச் சேர்ந்த 5 ஆயிரம் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று ஆளுநரிடம் மனு கொடுத்தோம். மக்கள் போராட்டம் வலுவடைந்திருக்கும் நிலையில், இனியும் தாமதிக்காமல் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.