ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு : 17 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் சுமார் 17 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 27) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் ஜெர்மன், பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த 17 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டங்கள் மூலம், 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் காரணமாக, உலகப் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்யவும், முதல்வரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

புதிய முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்தது, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க சி.ரங்கராஜன் குழு, கரோனா தடுப்புக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உற்பத்தியை தமிழ்நாட்டில் ஊக்குவிக்க அளிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளின் விளைவாக, பல்வேறு நிறுவனங்கள் கடந்த இரு மாதங்களில் மட்டும் புதிதாக இப்பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது,

799 குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக 102 கோடி ரூபாய் செயல்பாட்டு மூலதனக் கடன் வழங்கியது என, இக்கட்டான இக்கால கட்டத்திலும் பல முக்கிய நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்திட ஏற்படுத்தப்பட்ட நாடுகளுக்கான சிறப்பு இருக்கைகள், தொழில் நிறுவனங்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க ‘தொழில் நண்பன்’ திட்டம், அனுமதிகளை உடனுக்குடன் வழங்க ஒற்றைச் சாளர முறை, முதலீடு எளிதாக்குதல் பிரிவு, முதல்வரின் தலைமையிலான உயர்நிலைக் குழு என பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் அறிவித்து, செயல்படுத்திய பல திட்டங்களின் விளைவாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலின் விளைவாகவும் தொடர்ந்து பல புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கனரக வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி, தகவல் தரவு மையம், எரிசக்தி, மருந்து பொருட்கள் உற்பத்தி என பல்வேறு துறைகளைச் சார்ந்த 17 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் இன்று கையெழுத்திடப்பட்டன.

1) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 2,277 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கல்ஸ்’ (Daimler India Commercial Vehicles) நிறுவனத்தின், கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.

2) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பின்லாந்து நாட்டினை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின், கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம்; உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019 இல் சால்காம்ப் நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்திட ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் சிறப்பான தொழில் சூழலால் ஒரே ஆண்டில் மீண்டும் ஒரு விரிவாக்க திட்டத்திற்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு புத்துயிர் அளித்திட, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தொழில் துறை மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனாக இந்த புதிய முதலீடு வரப்பெற்றுள்ளது.

3) காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 900 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘பாலிமாடெக் எலெக்டிரானிக்ஸ்’ நிறுவனத்தின், ‘செமிகண்டெக்டர் சிப்ஸ்’ (semiconductor chips) உற்பத்தி திட்டம்.

4) 350 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த Chung Jye Company Limited நிறுவனம் மற்றும் Aston Shoes Pvt Ltd நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், காலணிகள் உற்பத்தி திட்டம்.

5) காஞ்சிபுரம் மாவட்டம், மப்பேடு பகுதியில் 400 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ‘லாய் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர் பிரைவேட் லிமிடெட் (LOGOS) நிறுவனத்தின், தொழிற்பூங்கா திட்டம்.

6) காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ‘மேண்டோ ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ (Mando Automotive India Private Limited) நிறுவனத்தின் ‘காஸ்டிங் ஃபெசிலிட்டிh\’ (Casting facility) திட்டம்.

7) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘டைனெக்ஸ்’ (Dinex) நிறுவனத்தின், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

8) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இந்திய-இங்கிலாந்து கூட்டு முயற்சியான ‘சென்னை பவர் ஜெனரேஷன் லிமிடெட்’ (Chennai Power Generation Limited) நிறுவனத்தின், இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்.

9) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில், 18 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 30 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஐஜிஎல் டிரான்ஸ்பிளண்டேஷன் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (IGL India Transplantation Solutions Pvt Ltd) நிறுவனத்தின் உறுப்புகள் பதப்படுத்தும் ரசாயன உற்பத்தி திட்டம்.

10) தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘விவிட் சொலேயர் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்’ (Vivid Solaire Energy Private Limited) நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம்.

11) சென்னை, அம்பத்தூரில், 2,800 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘ஹெச்.டி.சி.ஐ. டேட்டா சென்டர் ஹோல்டிங்ஸ் சென்னை எல்.எல்.பி’ (HDCI Data Centre Holdings Chennai LLP) நிறுவனத்தின், தகவல் தரவு மையம் திட்டம்.

12) சென்னையில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ‘எஸ்.டி. டெலி மீடியா’ (ST Tele Media) நிறுவனத்தின், தகவல் தரவு மைய திட்டம்.

13) சென்னையில் 210 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘Baettr’ நிறுவனத்தின், காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி (Wind mill components) திட்டம்.

14) காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பூங்காவில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 130 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சீன நாட்டைச் சேர்ந்த ‘பி.ஒய்.டி. இந்தியா பிரைவேட் லிமிடெட்’ (BYD India Private Limited) நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டம்.

15) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ‘மஹிந்திரா ஆரிஜின்ஸ்’ (Mahindra Origins) தொழிற்பூங்காவில், 46 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தைவான் நாட்டைச் சேர்ந்த ‘டி.ஜே.ஆர். பிரிசிஷன் டெக்னாலஜி கம்பெனி லிமிடெட்’ (TJR Precision Technology Company Limited) நிறுவனத்தின் ‘பிரிசிஷன் காம்போனெண்ட்ஸ்’ (Precision Components) உற்பத்தி திட்டம்.

16) காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் 15 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 20 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ‘பில்லர் இண்டஸ்டிரிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ (Pillar Industries India Pvt Limited) நிறுவனத்தின், ‘சீலிங் மெட்டீரியல்ஸ்’ (sealing materials) உற்பத்தி திட்டம்.

17) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா தொழிற்பூங்காவில், 12 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘லிங்கன் எலெக்டிரிக்’ (Lincoln Electric) நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் தொடங்கும் திட்டம்

மேற்கண்டவற்றில் முதல் 9 ஒப்பந்தங்கள் நேரடியாகவும், பிற ஒப்பந்தங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.