16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..


தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர்.

சென்னை காவல்துறையில் கடந்த 20 நாட்களாக பல அதிரடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்த ராகுல் காந்தி வந்தபோது அவர் பாதுகாப்பின்றி அரை மணி நேரம் பொதுமக்கள் நெரிசலில் சிக்கியது மத்திய உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது.

இதே போன்று பிரதமர் மற்றும் ராகுலுக்கு பாதுகாப்பு அளிக்கும் உயரிய அமைப்பான எஸ்பிஜி அமைப்பும் விளக்கம் கேட்டது. இது பலத்த சர்ச்சையை உருவாக்கிய நிலையில், சட்டம் ஒழுங்கை கவனிக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதேபோன்று பெண் ஐபிஎஸ் அதிகாரி தனது துறை ஐஜியின் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் முக்கிய உறுப்பினர் வெளி மாவட்டத்தில் பணியில் இருந்ததால் நிர்வாக வசதிக்காக சென்னைக்கு மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர். விசாகா கமிட்டி உறுப்பினர் அதிகாரியும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றம் குறித்த விவரம் வருமாறு:

1. மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபியாக பதவி வகித்த சு. அருணாச்சலம் தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

2. தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் கழக கூடுதல் டிஜிபியாக பதவி வகித்த சைலேஷ்குமார் யாதவ் சமூக நலம் மற்றும் மனித உரிமை ஆணைய கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார்.

3. சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையராக பதவி வகித்த எம்.சி.சாரங்கன் மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

4. சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராகப் பதவி வகித்த ஜெயராமன் பணிவரைமுறை பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜி சுமித் சரண் அமலாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டார்

6. பணி வரைமுறைப்பிரிவு ஐஜி தினகரன் சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.

7. குற்றப்பிரிவு சிஐடி ஐஜி மகேஷ்குமார் அகர்வால் சென்னை சட்டம் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டார்.

8. பயிற்சி பிரிவு ஐஜியாகப் பதவி வகித்த நாகராஜன் வடக்கு மண்டல ஐஜியாக மாற்றப்பட்டார்.

9. வடக்கு மண்டல ஐஜியாகப் பதவி வகித்த ஸ்ரீதர் குற்றப்பிரிவு சிஐடி ஐஜியாக மாற்றப்பட்டார்.

10. லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு மண்டல எஸ்பியாக பதவி வகித்த ஜெயலட்சுமி வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு சிஐடி எஸ்பியாக மாற்றப்பட்டார்.

11. சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையராகப் பதவி வகித்த தங்கதுரை சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

12. சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பதவி வகித்த சுப்புலட்சுமி சென்னை சமூக நலம் மற்றும் மனித உரிமை ஆணைய ஏஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

13. சமூக நலம் மற்றும் மனித உரிமை ஆணைய ஏஐஜியாகப் பதவி வகித்த விஜயலட்சுமி தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

14. தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்பியாகப் பதவி வகித்த வெண்மதி ஆவடி சிறப்பு காவல்படை ரெஜிமண்ட் கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

15. ஆவடி சிறப்பு காவல்படை ரெஜிமண்ட் கமாண்டண்டாகப் பதவி வகித்த வந்திதா பாண்டே அமலாக்க குற்றம், மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

16. அமலாக்க குற்றம், மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாகப் பதவி வகித்த சி.ஷியாமளா தேவி சேலம் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

மேற்கண்ட உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.