தகுதி நீக்கத்தால் காலியான 18 தொகுதிகள் இடைத்தேர்தல்: ஏப்.24-க்குள் முடிவெடுப்போம் என தேர்தல் ஆணையம் பதில்..

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த ஏப்.24 வரை அவகாசம் உள்ளதால்

அதற்குள் முடிவெடுப்போம் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக மனுக்கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில்

சட்டப்பேரவைத்தலைவரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வந்ததால் 18 எம்எல்ஏக்கள் பதவி பறிபோனது.

காலியாக உள்ள 18 தொகுதிகளில் விரைவாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது.

இது குறித்து பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,

தகுதி நீக்க எம்எல்ஏக்களின் பதவி பறிப்பால் காலியான 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து ஏப்ரல் 24-ம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது.

அங்கு தேர்தல் நடத்துவதற்கான அவகாசமும் ஏப்.-24 வரை உள்ளது. அதற்குள், அங்கு தேர்தல் நடத்துவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, வழக்கை முடித்து வைத்தனர்.