2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை : தினகரன் வரவேற்பு..


2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை ஆனது குறித்து தினகரன் கூறியதாவது:-

இதில் வருத்தப்படுவதற்கோ, வேதனைபடுவதற்கோ ஒன்றும் இல்லை. கனிமொழியும், ராசாவும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருமே நமக்கு தெரிந்தவர்கள்தான். அவர்கள் விடுதலை ஆனதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்.

எதிர்க்கட்சி என்றாலே அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று நினைப்பது நல்ல பண்பாடாக இருக்காது. எனவே இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்குபதிவுகளை இன்று நேரில் சென்று பார்த்தேன். சில பூத்களில் மின்னணு எந்திரங்கள் பழுதடைந்ததாகவும், இதனால் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார்கள்.

புதுவண்ணாரப்பேட்டை யில் உள்ள சென்னை நடு நிலைப்பள்ளி வாக்குச் சாவடி 77-ல் வாக்குப் பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர். இது பற்றியும் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

கேள்வி:- ஹவாலா பணம் 20 ரூபாய் நோட்டு கொடுத்து வாக்களிக்க சொன்னதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம் கொடுக்க இருப்பதாகவும் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே?

பதில்:- நீங்கள் கேட்கும் கேள்வியை பார்த்தால் நான் கடன் சொல்லி ஓட்டு கேட்டதாக கூறுகிறீர்கள். அப்படித்தானே.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் போது ஏன் பணம் கொடுத்து ஓட்டு கேட்க வேண்டும். அதுவும் தேர்தல் முடிந்து நாளை வந்து பணத்தை வாங்குங்கள் என்று சொன்னால் யாராவது ஓட்டு போடுவார்களா? சிந்தித்து பாருங்கள்.

இது அம்மா தொகுதி. இங்குள்ள மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்து விட்டனர். எடப்பாடி-ஓ.பி.எஸ். அணியினர் டெபாசிட் போய்விடக்கூடாது என்ற பயத்தில் என் மீது அவதூறு பரப்புகிறார்கள்.

கே:- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி உள்ளது? முறையாக நடக்கிறதா?

ப:- தேர்தல் ஆணையத் தின் செயல்பாடு முறையாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.