2 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட மரகதலிங்கம் மீட்பு..

திருவண்ணாமலை வேட்டவலம் ஜமீன் பங்களாவில் திருடு போன பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில்,

அதே ஜமீன் பங்களா வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டதாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் கோட்டை வளாகத்தில் மனோன்மணியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அரை அடி உயர பச்சை நிற மரகதலிங்கம் இருந்தது.

இந்த கோயிலில் சண்முக சிவாச்சாரியார் இரு வேளையும் பூஜைகள் நடத்தி வந்த நிலையில்,

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி காலை கோயிலின் நடையை திறந்து பார்த்த போது அவர் அதிர்ச்சியடைந்தார்.

கோயிலில் இருந்த பச்சை மரகதலிங்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

மேலும் தங்க தாலி, வெள்ளியிலான ஒட்டியாணம், கிரீடம் உள்ளிட்டவையும் திருடப்பட்டன.

கோயில் கருவறையில் இருந்த மரகதலிங்கத்தை கோயில் சுவரை துளையிட்டு கொள்ளையடித்தனர்.

இந்த வழக்கை அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளை குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சிலை கடத்தல தடுப்பு பிரிவு போலீசார் கோயில் நிர்வாகிகள், வேட்டவலம் ஜமீனில் பணிபுரிந்து வரும் சிலரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜமீன் ஊழியரான பச்சையப்பன் என்பவர் போலீசாருக்கு கொடுத்த தகவலில் காணமால் போன மரகதலிங்கம் பங்களா வளாகத்திலுள்ள குப்பை தொட்டியில் கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் மரகதலிங்கத்தை மீட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மரகதலிங்கத்தை தேடி வந்த நிலையில், அதே ஜமீன் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 நாட்களாக சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலரை பிடித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

கோடிக்கணக்கில் மதிப்புடைய மரகதலிங்கத்தை, சுவரை துளைபோட்டு கொள்ளையடித்து இப்படி குப்பையிலா வீசி செல்வார்கள் என சந்தேகத்தை எழுப்பும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இதற்கு முன்பு 1986-ல் இதே மரகதலிங்கம் திருடப்பட்டு ஒரே வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.