20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத்தில்,மொத்தம் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து,

ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தனிமைப்படுத்தி இடைத்தேர்தல் நடத்துவதில்,

சூட்சுமமான உள்நோக்கம் இருக்கலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன்.

மேலும் திருவாரூரில் கஜா புயல் தொடர்பான நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில்,அத்தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது, நிவாரணப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு,

பொதுமக்களின் அதிருப்தியும் கோபமும் அதிகமாகி, வாக்களிப்பதற்கு முழுவதும் எதிரான மனநிலை உருவாகிவிடும்;

அப்படிப்பட்ட மனநிலை ஜனநாயகத்தை நிச்சயம் செழுமைப்படுத்தாது.தேர்தலில் வெற்றி பெறுவது என்பதைவிட,

கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கு உரிமையான நிவாரணப் பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்து.

அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதற்கு இணங்க, திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள்.

வருகின்ற நாடளுமன்ற தேர்தலுடன் இணைத்து,”மினி சட்டமன்றத்தேர்தல்” என்று சொல்லுமளவுக்கு
காலியாக உள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன்