ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி: புவனேஸ்வரில் தொடங்குகிறது

உலக கோப்பை ஹாக்கி தொடர் புவனேஸ்வரில் நாளை தொடங்குகிறது. ஏ.ஆர். ரகுமான், ஷாருகான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது.

16 நாட்டு அணிகள் பங்கேற்கும் ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி  தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. ஒரிஸா மாநிலம் புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. சமீப காலமாக ஹாக்கி அரங்கில், இந்திய அணி மீண்டும் எழுச்சி கண்டிருப்பதாலும், இந்தியாவில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பை அரங்கேறுவதாலும், இத்தொடர் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ்  – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா – பெல்ஜியம், இந்தியா, கனடா, தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான்  ஆகிய அணிகள் ஏபிசிடி என்ற நான்கு பிரிவுகளாக போட்டியிடுகின்றன.

உலக ஹாக்கி சம்மேளனம் (FIH) சார்பில் 1971-ம் ஆண்டு முதல் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளின் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த உலகக் கோப்பை தொடர்கள் நடத்தப்படும். முதல் மூன்று உலகக்கோப்பைகள் 2 ஆண்டுகள் இடைவெளியில்  நடத்தப்பட்டன. 1978-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையே 3 ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்பட்ட ஒரே தொடர். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து உலகக் கோப்பைகளும் 4 ஆண்டு இடைவெளியில் நடத்தப்பட்டன.

புவனேஸ்வரில் தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டியில்  5-ம் இடத்தில் உள்ள இந்திய அணி, ஆசிய சாம்பியன் என்ற பெருமையுடன் களமிறங்கவுள்ளது. மன்ப்ரீத் சிங் தலைமையில், இளமையும் அனுபவமும் கலந்து வலுவாக இருக்கிறது இந்திய அணி. கோல்  கீப்பராக ஸ்ரீஜேஷ், பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட்  ஹர்மான்ப்ரீத் சிங், ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் தொடர் நாயகன் ஆகாஷ்தீப் என நட்சத்திர வீரர்கள் அணிவகுக்கிறார்கள். இந்திய அணி தடுப்பாட்டத்தில் கொஞ்சம் அதிகமாகக் கவனம் செலுத்தினால் 1975-ம் ஆண்டுக்குப் பிறகு  மீண்டும் உலகக்கோப்பை வென்று வரலாறு படைக்க வாய்ப்புள்ளது.

இதற்கான பிரம்மாண்ட தொடக்க விழா, புவனேஸ்வர் லிங்கா ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. போட்டிகள் நாளை தொடங்குகின்றன.