முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

ஏககாலத்தில் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லீம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது. இதற்கான சட்ட முன்வடிவை, வரும் 15ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முத்தலாக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறும் நடைமுறை, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறியது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு சட்டத்திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் அடங்கிய குழு, முத்தலாக் முறைக்கு தடைவிதிக்கும் சட்ட முன்வடிவை தயாரித்து வருகிறது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் தயாராகியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், செல்போன் மூலமாகவோ, வாட்ஸ் ஆப், இ-மெயில் உள்ளிட்டவை மூலம் எழுத்துப்பூர்வமாக, உடனடியாக முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் ஆண்களுக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் தயாராகியிருப்பதாக தெரிகிறது.

3 years jail for triple talaq