36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடல்: சுருங்கி வரும் கிராமப்புற வங்கிச் சேவை

தமிழகம், புதுச்சேரியில்  36 எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற மக்களுக்குக்கான வங்கிச் சேவை பெருமளவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ., என்ற, பாரத ஸ்டேட் வங்கியுடன், ஐந்து துணை வங்கிகள், 2017 ஏப்., 1ல் இணைக்கப்பட்டன. இந்த மிகப்பெரிய இணைப்பு, இந்திய வங்கி வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. இதையடுத்து, அருகருகே உள்ள பல்வேறு கிளைகள் மூடப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னை வட்டத்தில், 36 கிளைகள் சமீபத்தில் மூடப்பட்டுள்ளன.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

எஸ்.பி.ஐ., சென்னை வட்டம், சென்னை, 1, 2, சேலம், மதுரை, திருச்சி, கோவை என, ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், இதன் கீழ் அடங்கும்.இதில், ஐந்து வங்கிகள் இணைப்பின் போது, பல்வேறு கிளைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு கிளைகளை மூடவும் திட்டமிடப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில், சென்னையில், எழும்பூர் ரயில் நிலைய சாலை, எழும்பூர் நெடுஞ்சாலை, பாரிமுனை, முத்தியால்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை, தணிகாசலம் சாலை, அண்ணா சாலை, மேற்கு தாம்பரம் கிளைகள் மூடப்பட்டன.

மேலும், மதுரை, புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள கிளைகளையும் சேர்த்து, 36 கிளைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இவற்றில், எஸ்.பி.ஐ., கிளைகள் இரண்டு; மீதம் உள்ளவை, துணை வங்கிகளின் கிளைகள். இவை, அருகருகே இருந்ததால், மூடும் சூழலுக்கு தள்ளப்பட்டன. மேலும், மூடப்பட்ட கிளைகளின் வாடிக்கையாளர் கணக்குகள், அருகில் உள்ள கிளைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கிராமப்புற மக்கள், விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் என பெரும்பாலான எளிய மக்கள் எஸ்பிஐ வங்கிக் கிளைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், முக்கிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக் கிளைகள் மூடப்படுவது, சாமானிய மக்களுக்கான வங்கிச் சேவையை பாதிக்கக் கூடிய நடவடிக்கையாக இருக்கும் என தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.