36 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு..

36 ஆண்டுகளுக்கு முன் களவு போன சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை, ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில், குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட குலசேகரமுடையார், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கடந்த 1982ம் ஆண்டு நடராஜர் சன்னதியின் இரும்பு கதவுகள் உடைக்கப்பட்டு, 600 ஆண்டுகள் தொன்மையான ஐம்பொன்னாலான நடாரஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, மாணிக்கவாசகர் சிலை, ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் துப்புதுலக்க முடியாததால் கடந்த 1984ம் ஆண்டு இது கண்டுபிடிக்க முடியாத வழக்கு என்று திருநெல்வேலி மாவட்ட காவல் துறையால் முடித்து.

இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 1½ ஆண்டுகளாக, இந்த சிலை திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் திருட்டுபோன ஐம்பொன் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலையை கடத்தி சென்ற கும்பல் ஆஸ்திரேலியாவில் சிலையை விற்பனை செய்துள்ளதும், அதில் நடராஜர் சிலை மட்டும் சுமார் ரூ.30 கோடி மதிப்புடையது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடராஜர் சிலை உள்பட 8 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இதனிடையே இதே கோயிலில் இருந்து கடத்தப்பட்ட 2 அடி உயரம் கொண்ட சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலை, கடந்த 1985-இல் நெல்லை காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள சுப்பிரமணியர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்து அறநிலையத் துறை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலையை ஆய்வு செய்ததில், அது கடத்தப்பட்ட சிலை அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவ்வழக்கில் மீண்டும் புலன் விசாரணை துவக்குமாறு நெல்லை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமாருக்கு ஐ.ஜி மின்னஞ்சலில் உத்தரவிட்டுள்ளார்.