ஐந்து மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடல்

ஐந்து மாநிலங்களில் இச்சேவையை நிறுத்துவது பற்றிய முடிவை பிரசார் பாரதி அமைப்பு டிசம்பர் 24, 2018 அன்று அகில இந்திய வானொலியின் இயக்குநருக்கும் தெரியப்படுத்தியுள்ளது.

கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் அகில இந்திய வானொலியின் தேசிய ஒலிபரப்பு நிறுத்தப்படுகிறது என மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைப்பான பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஜனவரி 3ஆம் தேதியிட்டு பிரசார் பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங், குஜராத்தின் ஹைதராபாத் , தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் தேசிய ஒலிபரப்பு சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கே உள்ள பிராந்திய பயற்சி மையங்களும் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அகில இந்திய வானொலியின் தேசிய ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் 1987ஆம் ஆண்டு முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒலிபரப்பாகின்றன.

ஐந்து மாநிலங்களில் இச்சேவையை நிறுத்துவது பற்றிய முடிவை பிரசார் பாரதி அமைப்பு டிசம்பர் 24, 2018 அன்று அகில இந்திய வானொலியின் இயக்குநருக்கும் தெரியப்படுத்தியுள்ளது.

மூடப்படும் வானொலி நிலையங்களில் சேமிக்கப்பட்டுள்ள இதுவரை ஒலிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு டெல்லியில் உள்ள ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பப்பட உள்ளன எனவும் பிரசார் பாரதி அறிவிப்பு கூறுகிறது.

80 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் அகில இந்திய வானொலி 262 ஒலிபரப்பு மையங்களுடன் நாட்டின் 99.18% மக்களை சென்றடையும் ஒரே ஊடகமாக விளங்குகிறது.

வெளிநாட்டு ஒளிப்பரப்புகளையும் 1939ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. அகில இந்திய வானொலியே உலகின் மிகப்பெரிய வானொலி சேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வானொலி நிலையங்கள் மூடப்படுவதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் நிலையும் கேள்விக்குறி ஆகிறது. இது பற்றி எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.