500 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் வேலூருக்கு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.

முக்கிய அம்சமாக சென்னையில் இருந்து வேலூர் மற்றும் திருவண்ணாமலைக்கு குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில்  இருந்து கோயம்பேட்டுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கும், வேலூருக்கும் செல்லும் முதல் பயணத்தில் மட்டும் கட்டணம் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக குளிர்சாதனப் பேருந்துகளில் இரு புறமும் இரண்டிரண்டு இருக்கை வரிசைகளுக்குப் பதில் இந்தப் பேருந்துகளில் வழக்கமான அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் போன்று ஒருபுறம் 3 இருக்கை வரிசையும் மறுபுறம் 2 இருக்கை வரிசையும் இடம்பெற்றுள்ளன. புஷ்பேக் சீட், அறிவிப்புகளுக்காக மைக் மற்றும் 6 ஸ்பீக்கர்கள், பயணிகள் வசதிக்கு ஏற்ப குளிர்சாதனவசதியை மாற்றியமைக்க வசதி, எல்.இ.டி. விளக்கு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

அனைத்து இருக்கைகளிலும் செல்ஃபோன் சார்ஜர் வசதி, காற்றுப் போக்கி, அவசரகால வழி, முன் – பின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகளை ரிமோட் மூலம் இயக்க வசதி, பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது தடை இருந்தால் எச்சரிக்கும் சென்சார் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் இந்தப் பேருந்துகளில் இடம்பெற்றுள்ளன.

சென்னைக்கு 8 பேருந்துகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 198 பேருந்துகளும், சேலம் கோட்டத்துக்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்துக்கு 160 பேருந்துகளும் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை 603 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 316 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

 ​