5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வு : தெளிவில்லாததால் நீடிக்கும் குழப்பங்கள்..

5 மற்ரும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையில் 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

மத்திய மனிதவள அமைச்சகம் நிபுணர் குழு வைத்து நடத்திய ஆய்வில், அனைத்து மாநிலங்களிலும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் கல்வித்தரம் உயரும் என்று பரிந்துரைக்கப்பட்டு இதற்கான முடிவை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியது.

இதனையடுத்து நடப்பு ஆண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் அரசாணையும் வெளியிட்டார். பொதுத் தேர்வை எப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பக் கல்வி இயக்குநர் சேதுராம வர்மா பள்ளிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார்.

ஆனால் இந்த நடைமுறைகளுக்கு இடையே தேர்வு நடத்துவதில் 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிகளில் கூறினார். ஆனாலும் பொதுத்தேர்வு முறை நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குழப்பங்கள் ஒருபுறம் ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

“5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்” என்று தெரிவித்திருப்பது மாணவர்கள், ஆசிரியர்கள் என்று அனைத்து தரப்பினரிடையேயும் குழப்பங்களை மேலும் அதிகரித்துள்ளது.