75 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரி கடற்கரை சாலை திறப்பு..

புதுச்சேரியின் சிறப்பான சுற்றுலா பகுதியான கடற்கரை சாலை 75 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் மிகப்பெரிய பொழுது போக்கு தளமாக கடற்கரை சாலை உள்ளது.

காலையும் மாலையும் இங்கு ஆயிரக்கணக்கில் நடைபயிற்சிக்கு வருவது வழக்கம்.கொரோனா தடுப்பு முன் நடவடிக்கையாக மார்ச் 17ஆம் தேதி புதுச்சேரியில் கடற்கரை சாலை மூடப்பட்டது.

கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை 75 நாட்களுக்கு பிறகு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.கடற்கரை சாலையை யொட்டி போடப்பட்ட தடுப்புகள் அதிகாலை அகற்றப்பட்டன.

இதனையடுத்து நடைபயிற்சிக்கு மக்கள் வந்தனர்.இருப்பினும் பெருமளவிலான மக்கள் நடைப்பயிற்சிக்கு வரவில்லை.

குறைந்த அளவில் நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் கவசம் அணிந்து பங்கேற்றனர். மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பாகவே புதுச்சேரி அரசு கடற்கரை சாலையை மூடி சமூக பரவலுக்கு தடைவிதித்தது வரவேற்கத்தக்கது என நடைபயிற்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.