எந்த விதமான சோதனைகளுக்கும் அதிமுக அரசு பயப்படாது : தம்பிதுரை..


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பிதுரை, கடந்த கூட்டத்தொடரிலேயே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தோம்.

ஆனால் எங்களின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்., ஆதரவு அளிக்கவில்லை. காவிரி விவகாரத்தில் காங் – திமுக சதி செய்துள்ளன. காவிரி பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது. தற்போது காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் ஓட்டளித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆந்திராவை இரண்டாக பிரித்த காங்., தற்போது தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து கொண்டு நாடகமாடுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசையும் யாராலும் நீக்க முடியாது. அண்ணா பெயரால் துவங்கப்பட்ட கட்சியை தேசிய கட்சியால் எதுவும் செய்ய முடியாது. வருமான வரி சோதனைக்கு அதிமுக அரசு பயப்படாது என்றார்.