ஜிஎஸ்டியுடன் பேரிடர் வரியும் சேர்த்துச் செலுத்த வேண்டும்: கிளம்பியது புதிய பூதம்

ஜிஎஸ்டி வரியுடன், பேரிடருக்கான வரியையும் தனியாக சேர்த்து வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மத்திய அரசிடம் தேசிய பேரிடர் நிதி உதவி அளிக்கத் தேவையான பணம் இல்லை என்றும் இதனால் ஜிஎஸ்டி செலுத்தும் போது ‘பேரிடர் வரி’ என்ற பெயரில் செஸ் வரிப் பிடித்தம் செய்யலாம் என்றும் நிதி அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் தலைவராக உள்ள பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி இது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

மறுபக்கம் பேரழிவு வரி வசூல் செய்ய அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து கருத்துக்கள் கேட்டு ஜிஎஸ்டி கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில் அனைத்து மாநில அரசுகளிடமும் 15 முதல் 20 கேள்விகள் வரை கேட்டுள்ளனர். இதற்கு மாநில அரசுகள் அளிக்கும் பதிலினை பொருத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று சுஷில் மோடி தெரிவித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

 

மேலும் இதன் மூலம் வசூலிக்கப்படும் வரித் தொகை அந்தத்தந்த மாநிலங்களில் ஏற்படும் பேரழிவுகளுக்கு மட்டும் செலவு செய்யப்படுமா அல்லது தேசிய அளவில் பயன்படுத்தப்படுமா என்பது மாநில பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது.

 

ஜிஎஸ்டி அமலுக்குக் வந்த பிறகு தேசிய பேரிடர் நிலை வரி சரிந்துள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் தேசிய பேரிடர் நிலை வரி வசூல் 6,450 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே 2017-2018 நிதி ஆண்டில் 3,660 கோடி ரூபாயாகச் சர்ந்துள்ளது. இதனால் மாநிலங்களில் பேரிடர் ஏற்படும் போது நிதி உதவி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

அடுத்து வர இருக்கும் நவம்பர் மாத ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுச் சுமுக முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Soon, You May Have to Pay ‘Disaster Tax’ with GST