சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கோயில் தேவஸம் போர்டு திடீர் ஆதரவு..

சபரிமலை கோயிலை நடத்தி வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தன் முடிவில் அந்தர்பல்ட்டி அடித்து

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ஆச்சரியமேற்படுத்தியுள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் மாநில அரசு உறுப்பினர்களும் உள்ளனர்.

இன்று இவர்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் முன்பு

‘உயிரியல் ரீதியான குணாம்சங்களுக்காக’ ஒரு குறிப்பிட்ட வகையினரை அனுமதிக்காமல் பாகுபாடு காட்ட முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து திடீர் யு-டர்ன் அடித்துள்ளது.

அமர்வின் முந்தைய நண்பகல் அமர்வில் செப்.28, 2018-ன் உச்ச நீதிமன்றத் தீர்ப்புடன் மாநில அரசு உடன்படுவதாகவும்,

இதனால் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியது.

இந்நிலையில் தேவஸம் போர்டு, “சட்டப்பிரிவு 25(1), அனைத்துப் பிரிவினரும் மத உணர்வுகளைக் கடைபிடிக்க சமத்துவத்தை வலியுறுத்துகிறது” என்று போர்டை பிரதிநிதித்துவம் செய்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி அமர்வின் முன்னிலையில் தெரிவித்தார்.

முன்னதாக தேவஸம் போர்டு சுவாமி ஐயப்பனின் தன்மையைக் குறிப்பிட்டு மாதவிடாய் வயதுடைய பெண்களை அனுமதிக்க முடியாது என்று தீவிரமாக வாதிட்டது.

இந்நிலையில் திடீர் யு-டர்ன் அடித்த தேவஸம் போர்டு, “உயிரியல் ரீதியான பண்புகளைக் காரணம் காட்டி வாழ்க்கையின் எந்த ஒரு புலத்திலும் பெண்களை ஒதுக்க முடியாது நம் அரசியல் அமைப்பின் முக்கியமான அங்கம் சமத்துவம் ஆகும்” என்றது.

இன்று சீராய்வு செய்யக்கோரும் மனுக்கள் மீதான விசாரனையை உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்தி வைத்தது.