“ஒரே நாடு – ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்” அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது: ஸ்டாலின்..

“காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பிற்கும் – காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் ‘ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்’ பாதிப்பையோ, அச்சுறுத்தலையோ ஏற்படுத்தி விடக்கூடாது” என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

அதுக்குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு என்ற முகவுரையுடன், “ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்” அமைக்கும் சட்ட மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ள செயல், உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டுள்ள காவிரி இறுதித் தீர்ப்பிற்கும், அதன்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கும் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடக்கூடாது என்று எச்சரித்திடக் கடமைப் பட்டிருக்கிறேன்.

நாடு முழுவதும் உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு, 14.3.2017 அன்றே மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு – அப்போதே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இதை எதிர்த்தன. ஆனால் விடாப்பிடியாக,அதே மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு இப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

இந்த மசோதாவில், “நடைமுறையில் உள்ள நதி நீர் நடுவர் மன்றங்கள் எல்லாம் கலைக்கப்படும்” என்றும், “அந்த நடுவர் மன்றங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் தாவாக்கள் புதிதாக உருவாக்கப்படும் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவாச் சட்டத்தில், “நடுவர் மன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு, அரசிதழில் வெளியிட வேண்டும்” என்று இருந்த விதி>

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இப்போது புதிதாக தாக்கல் செய்யப்படும் மசோதாவிலும் அது மாதிரி இருந்தால் – மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எழுவது தவிர்க்க முடியாதது ஆகும்.

மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையே மதித்து கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது.

அதைத் தட்டிக் கேட்கவும் இயலாமல் மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக தயங்கி நிற்கிறது. அப்படியிருக்கையில் நடுவர் மன்றத் தீர்ப்பே அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியமே இல்லை என்பது எவ்விதத்திலும் நதி நீர்ப் பிரச்சினைய தீர்க்கவும் உதவாது, தண்ணீர் கிடைக்கவும் பயன்படாது என்பதை, மத்திய பா.ஜ.க. அரசு ஏனோ உணரத் தவறியிருப்பது வேதனையளிக்கிறது.

ஆகவே “ஒரே நதி நீர்த் தீர்ப்பாயம்” என்ற போர்வையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கலைத்து உருக்குலைப்பதற்கு ஒரு கருவியாக மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி விடக்கூடாது. அப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தாது என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை.

திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதா தாக்கலாகும் போது எச்சரிக்கையாக இருந்து, தங்களது கருத்துக்களை ஆணித்தரமாக உறுதியுடன் எடுத்து வைப்பார்கள் என்பதைத் தெரிவிக்கும்

ஸஅதே வேளையில், தமிழக அரசும் உடனடியாக மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு “ஒரே நதித் நீர் தீர்ப்பாயம்” அமைக்கும் மசோதா, காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எந்த விதத்திலும் ஊறுவிளைவித்து விடக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து –

அதற்கான உறுதிமொழியை மசோதா நிறைவேறும் முன்பு மத்திய அரசிடம் பெற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்சார விநியோகம், ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்பது;

கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயங்குவதாகச் சொல்லிக் கொண்டு; அனைத்தையும் மையப்படுத்தும் முயற்சி, சரியானதுதானா என சற்று எண்ணிப் பார்த்திட வேண்டும்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.