கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது முதலாம் ஆடு நினைவு நாளான இன்று சென்னை அண்ணாசாலையில் இருந்து கலைஞர் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடைபெற்றது.

இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்

வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்துக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து கலைஞர் நினைவிட வளாகத்தில் மு.க.ஸ்டாலின் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

இதே போல் முதுபெரும் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஏராளமான திமுகவினர் திரண்டுள்ளனர்.

அவர்கள் அலை அலையாக சென்று கலைஞருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் இன்று கலைஞரின் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்.

இதிலும், இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும்  பொதுக்கூட்டத்திலும் பல்வேறு தலைவர்க்ள் கலந்துகொள்கின்றனர்.

இதனிடையே மு.க. அழகிரி தனது குடும்பத்தினருடன் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பாடலாசிரியர் வைரமுத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், கலைஞரை தமிழ்நாடு நினைத்துக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்,