சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம்..

கரோனா ஊரடங்கு தடை காலத்தில் அம்மா உணவகம் ஏழை – எளியோர்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் வாழ்வளித்தது. ஓட்டல்கள் மூடப்பட்டதால் பெரும்பாலான வீடுகளுக்கு அம்மா உணவகம் அக்‌ஷய பாத்திரமாக விளங்கியது.

கடந்த ஏப்ரல் 23-ந்தேதி முதல் அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

அதற்கான உணவுக்கான செலவீனத்தை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கின.

ஏப்ரல் 23-ந்தேதி முதல் மே 17-ந்தேதி வரையிலும், மே 20 முதல் 28-ந்தேதி வரையிலும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் 1 கோடியே 36 லட்சம் பேர் ஊரடங்கு காலத்தில் இதன் மூலம் பயனடைந்தனர்.

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கிய செலவுகளுக்காக 3 கோடியே 84 லட்ச ரூபாய் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

ஊரடங்கால் தவித்த ஏழை, எளியோருக்கு, சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் இலவச உணவை சென்னை மாநகராட்சி வழங்கியது.

இதுவரை 6 கோடி ரூபாய் மதிப்பில் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேர் பயனடைந்தனர்.

இந்நிலையில், இதனால் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தப்பட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் இன்று முதல் உணவுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம், சப்பாத்தி தலா 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரையில் உணவு இலவசமாக வழங்கப்பட்டதால் இன்றும் பலர் இலவசமாக பெறுவதற்காக வந்தனர். ஆனால் விலை கொடுத்து பெற வேண்டும் என்று கூறப்பட்டதால் ஒரு சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.