74-வது சுதந்திர தினம்: சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியேற்றி முதல்வர் உரை..

நாட்டின் 74-வது சுதந்திர தினம், இன்று, ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்திறங்கிய முதல்வர் பழனிசாமி தேசியக் கொடி ஏற்றினார்.

பிற்பாடு அவர் உரையாற்றினார், “நான்காவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்ததில் பெருமையடைகிறேன். மக்களின் அன்பு ஆதரவை பெற்றுள்ள நான் மக்களிடம் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.
சுதந்திரத்தின் பலனை அனைவரும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கரோனா தடுப்பு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் கரோனா உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. கரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கரோனாவை வெல்வோம் என்று உறுதிபடக் கூறுகிறேன்.

தமிழக அரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டு கரோனா தடுப்புப் பணிக்கு ரூ.6,650 கோடி செலவிடப்பட்டுள்ளது. வந்தேபாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின் மூலம் 64,661 வெளிநாடு தமிழர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
4.18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் ஓய்வூதியம் 16,000 த்திலிருந்து ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஊதியம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.8,500 ஆக உயர்த்தப்படும்.