“2G இழப்பு என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்தது ஏன்?” : ஆ.ராசா கேள்வி..

2ஜி விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி இழப்பு என பொய்யான குற்றச்சாட்டு மூலம் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு, இப்போது 1 லட்சம் கோடியை இழக்கத் துணிந்தது ஏன்?” என மக்களவையில் ஆவேசமாகப் பேசியுள்ளார் மக்களவை தி.மு.க கொறடா ஆ.ராசா எம்.பி.,

மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா,

“1 லட்சம் கோடிக்கும் மேல் நிலுவைத்தொகை பெற உச்சநீதிமன்றம் அனுமதியளித்தும் ஏர்டெல், வோடஃபொன் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய ஏறத்தாழ 1 லட்சம் கோடி ரூபாயை 20 ஆண்டுகாலத்திற்கு தள்ளிவைப்பதாக மத்திய பா.ஜ.க அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2ஜி விவகாரத்தில் கற்பனையான மதிப்பான 1,76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு எனக் குற்றம்சாட்டப்பட்டு, பின்னர் அது குற்றமில்லை என நிரூபணமானது. அந்தப் பொய்க் குற்றச்சாட்டால் ஆட்சியையே நாங்கள் காவுகொடுக்க நேரிட்டது. அதைப் பூதாகரமாக்கித்தான் ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க.

ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே அரசுக்கு வரவேண்டிய வருவாய் 1 லட்சம் கோடியை இழக்க இந்த அரசு எப்படித் துணிந்தது? தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 20 ஆண்டுகாலம் சலுகை அளித்தது யார்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெளிவான பதிலளிக்காமல் பிதற்றினார்.

இதையடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ஆ.ராசா, “தனிநபர்களின் சுதந்திரத்திற்கு எதிராக தனிநபரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது இந்த அரசுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது” எனக் குற்றம்சாட்டினார்.