ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என மத்திய அரசு தகவல்..

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்களில் ஒன்று கி.மு. 905 காலகட்டத்தையும், மற்றொன்று கி.மு. 791 காலகட்டத்தையும் சேர்ந்தது என்பது,

அமெரிக்காவில் நடைபெற்ற கார்பன் கதிரியக்க சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக, மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி, கடந்த 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு,

செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும்,

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து தொல்பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை கார்பன் டேட்டிங் எனப்படும் கார்பன் கதிரியக்க பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கார்பன் பரிசோதனைக்கும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்பன் சோதனைக்காக ஃபுளோரிடாவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு பொருட்களின் முடிவுகள் வெளிவந்துள்ளது என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதில் ஒரு பொருள் கி.மு. 905 காலகட்டத்தையும், மற்றொரு பொருள் கி.மு. 791 காலகட்டத்தையும் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த மத்திய அரசு, அதனடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவை என கேட்டது.

இதேபோல் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கி.மு 395 ஆண்டு காலகட்டத்தை சேர்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரியவருகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா?

என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.