அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்?

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார்.

பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.
இந்த நிலையில், அபிநந்தன் இன்று பிற்பகல் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறி உள்ளார்.

வாகா எல்லை வழியாக அவர் விடுவிக்கப்படுவார் என கூறினார்.

சுஷ்மா சுவராஜ் கவுரவ விருந்தினராக கலந்து கொள்ளும் வெளியுறவு மந்திரிகளின் மாநாட்டில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார்.

இதற்கிடையில், ஜெனிவா ஒப்பந்தப்படி பாகிஸ்தானில் செயல்படும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

போர் கைதிகள் குறித்தும் அவர்கள் உரிமை குறித்தும் ஜெனிவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* போர்க் கைதிகள் மனிதாபிமானத்துடன், எந்தவித நிற, மத, மொழி பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும்.

* அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அவர்களை காயப்படுத்தவோ, ரகசிய தகவல்களுக்காக சித்ரவதை செய்யவோ கூடாது.

* கண்ணியக் குறைவு ஏற்படுமாறு திட்டுவதோ, கீழ்த்தரமாக நடத்துவதோ கூடாது.

* போர் முடிந்தவுடன், எந்தவித பழிவாங்குதல் நடவடிக்கையும் இல்லாமல், அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். பிணையக் கைதியாக பிடித்து வைக்க கூடாது.

* போர்க்குற்றங்களில் ஈடுபட்டவராக இருந்தால், கைது செய்த நாடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களுக்கு செல்லாது.

* கைதிகளுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, சுகாதாரம், மருத்துவ சேவை உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.