நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஒப்புதல்: தேர்தல் அதிகாரி நியமனம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த அச்சங்கத்தின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவசர செயற்குழு: 2015 -18-காலகட்ட நிர்வாக பதவிகளுக்கான தேர்தல் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில்

நாசர் தலைமையிலான அணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி நிர்வாகத்துக்கு வந்தது.

இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

ஆனால், சங்கக் கட்டடப் பணிகளை காரணம் காட்டி தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த காலக் கெடு முடிவுக்கு வந்து விட்டதால் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சங்கத்தின் அவசர செயற்குழு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விஷால், கார்த்தி, கருணாஸ் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சங்கத்துக்கு தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததால், தேர்தலை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

தேர்தல் அதிகாரி: இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார். இதற்கும் செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் ஏற்கெனவே நடிகர் சங்கத் தேர்தலை நடத்தியவர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கத்தின் அலுவலகம், முறைப்படி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்படுகிறது.