என்னை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டார்கள்: விஜயகுமார் மகள் வனிதா கண்ணீர்

தந்தை விஜயகுமாரும், சகோதரிகளும் தன்னை நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டதாக நடிகை வனிதா கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனது வீட்டை, படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்த தனது மகள் வனிதா விஜயகுமார் அதை காலி செய்யவில்லை என பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார அந்த புகாரின் அடிப்படையில், விஜயகுமார் வீட்டிற்குள் அத்துமீறி தங்கியிருநததாக வனிதா விஜயகுமார் உள்ளிட்ட எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 7 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையத்துக்கு வந்த வனிதா, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார், வீட்டை காலி செய்யுமாறு கூறி தன்னையும் தனது மகளையும் தாக்கியதாக கூறினார். வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் தற்போது நடுரோட்டில் நிற்பதாகவும் அவர் கண்ணீர்மல்க தெரிவித்தார்.

தனது சகோதரர் அருண் விஜய் மற்றும் தனது சகோதரி ப்ரீத்தா விஜயகுமாரின் கணவரும், திரைப்பட இயக்குநருமான ஹரியின் தூண்டுதலின்பேரிலேயே தனக்கெதிராக தனது தந்தை நடந்து கொள்வதாக வனிதா குற்றம்சாட்டினார் தனது தாய் மஞ்சுளா பெயரில் இருந்த 8 சொத்துக்கள் 6 மாதங்களில் விஜயகுமாரின் பெயருக்கு மாற்றப்பட்டு, பின்னர் அருண் விஜயின் தாயார் பெயருக்கும் பிறகு அருண் விஜய்யின் பெயருக்கும் அடுத்தடுத்து மாற்றப்பட்டிருப்பதாக வனிதா தெரிவித்தார்.

ஏற்கனவே வீடு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டபோது குடும்ப நண்பரான ரஜினி தீர்த்து வைத்ததாகவும், தற்போது அவரை சந்திக்க முடியவில்லை என்றும் வனிதா கூறினார்.

பிரச்சினையின் பின்னணி

விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக தெரிகிறது.

குறிப்பிட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யவில்லை. இது குறித்து விஜயகுமார் தரப்பு அவரிடம் கேட்ட போது இது எனது சொத்து, வீட்டை காலி செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், வேறுவழியின்றி நடிகர் விஜயகுமார், தனது வீட்டில் வசிக்கும் மகள் வனிதா, வீட்டை காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாகவும், அவரை வீட்டில் இருந்து காலி செய்து தர வேண்டும் எனவும் புகார் மனு அளித்தார்.

இதனால், செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்க ஆலப்பாக்கத்தின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வனிதா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளையும் வனி்தா பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

 

 ​

Actress Vanitha alleged  her father and sisters